ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் நேற்று பூண்டி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அம்மம்பாக்கம், ராமநாதபுரம், நெல்வாய், வெள்ளாத்துக்கோட்டை, அரியத்தூர், நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், கூனிப்பாளையம், டிபி.புரம், வெலமகண்டிகை, பென்னலூர்பேட்டை, ராமலிங்காபுரம், பெரிஞ்சேரி ஆகிய ஊராட்சிகளில் திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது டி.ஜெ.கோவிந்தராஜ் பேசியதாவது, “சீத்தஞ்சேரி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய், வீட்டு மனை பட்டா இல்லாதவர்கள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும். சீத்தஞ்சேரியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத தேர்வு மையம் அமைக்கப்படும்,” என கூறினார். மேலும், வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 100 நாள் பணியாளர் பெண்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது, அவர்கள், “எங்களுக்கு கூலி சரிவர வழங்குவதில்லை. முதலில் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றுங்கள்” என கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்ட வேட்பாளர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக வழி நெடுகிலும் பெண்கள், வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து, தேங்காய், பூசணிக்காய் உடைத்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர். இதில், பூண்டி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரவி தலைமையில் அவைத்தலைவர் சுப்பிரமணி, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், நாகராஜ், ஜெயவேல், ஸ்ரீதேவி, ரகு, ராகவன், ஞானமுத்து, பொன்னுசாமி, ஞானமணி, பாலசுப்பிரமணி, சீனிவாசன், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ரஞ்சித்குமார், லோகநாதன், கோபி, கம்யூனிஸ்ட் முரளி, விடுதலை சிறுத்தைகள் பஞ்சா, ராள்ளை பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.